பொள்ளாச்சி: தேங்காய் விளைச்சல் குறைந்து, தேங்காய் எண்ணெய் விலை லிட்டர், 560 ரூபாயாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், சில ஆண்டுகளாக தென்னையில் வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் போன்ற பிரச்னைகள் அதிகரித்தன. இதனால், நடப்பாண்டு தேங்காய் சீசனில் விளைச்சல் குறைந்தது. வழக்கத்தை விட, 40 சதவீதம் உற்பத்தி குறைந்ததால், தேங்காய், கொப்பரை விலை உயர்ந்தது.இதனால், சில்லரை விற்பனையில், தேங்காய் எண்ணெய் லிட்டர், 410 முதல் 450 ரூபாய் வரையும், செக்கு எண்ணெய் லிட்டர், 560 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், ''தேங்காய் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக, பலரும் கொப்பரை உற்பத்தி செய்யாததால், கொப்பரை உலர் களங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.https://x.com/dinamalarweb/status/1949266399664427034 ''ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, மேலும், விலை உயரும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தேங்காய் சீசன் துவங்கும். அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை,'' என்றார்.
செக்கில் சிக்கிய அவதி
மரச்செக்கு எண்ணெய் ஆலை உரிமையாளர் செந்தில்குமார் கூறுகையில், ''15 கிலோ கொப்பரையை அரைத்தால், எட்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். ஆறு மாதத்துக்கு முன், ஒரு லிட்டர் செக்கு எண்ணெய், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர், 560 ரூபாயாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்,'' என்றார்.
கலப்பட அபாயம்
தேங்காய் எண் ணெய் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், ஏதாவது எண்ணெய்யை கலப்படம் செய்து, குறைந்த விலையில் விற்பதும் நடக்கிறது. கொப்பரை விலையை கணக்கிட்டே தேங்காய் எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த விலைக்கு கிடைக்கும் எண்ணெய், கலப்பட எண்ணெய்யாக இருக்கலாம். அதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்.