கலவரத்தை துாண்டும் பிபிசி டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்
சென்னை: 'கலவரத்தை துாண்டும் விதமாக, கட்டுரை வெளியிட்ட பி.பி.சி., நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அப்பிரிவு மாநிலத் தலைவர் குமரகுரு கூறியதாவது: அக்., 23ம் தேதி, பி.பி.சி., தமிழ் வலைதளத்தில், மற்ற நாடுகளில் நிலவும், அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, அரசையே மாற்றி அமைக்கும், 'ஜென் இசட்' என்ற இளைய சமூகத்தினர் ஏன், இந்தியாவின் வீதிகளில் இறங்கி போராடவில்லை என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. இக்கட்டுரை வாயிலாக, அமைதியான சூழ்நிலை நிலவும் நம் நாட்டில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த, பி.பி.சி., நிறுவனம் முயற்சிக்கிறது. எனவே, பி.பி.சி., நிறுவனத்தின் மீது, உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் சீரான வளர்ச்சி மற்றும் அமைதியான சூழ்நிலையை விரும்பாத, வெளிநாட்டு சதியால், பி.பி.சி., போன்ற நிறுவனங்கள் வாயிலாக, இது போன்ற தேவையற்ற மற்றும் இளைஞர்களை, தவறான முறையில், துாண்டிவிடும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. பி.பி.சி., நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிர்வாகிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.