விழுப்புரம் : விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் மாதவன், 20; கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன், நண்பராக பழகி வந்தார்.மாதவன் அந்த சிறுவனை அழைத்து, தவறான பழக்கம் உள்ள பெரிய பசங்களுடன் சேராதே என அறிவுரை கூறியுள்ளார். இதை அறிந்த சம்மந்தப்பட்டவர்கள் மாதவன் மீது ஆத்திரமடைந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை, சேவியர் காலனியைச் சேர்ந்த ரொசாரியா, 20; ஜேம்ஸ், 25; துரைபாண்டி, 24; ஆகியோருடன், அந்த சிறுவனும் சேர்ந்து, பட்டாசு தயாரிக்கும் மருந்து மூலம், நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை மாதவன் வீட்டு வாசல் கதவின் மீது வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில் கதவு சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து, மாதவனின் சகோதரர் ஆதவன், 27; அளித்த புகாரின் பேரில், ரொசாரியா, ஜேம்ஸ், துரைப்பாண்டி, மற்றும் சிறுவன் ஆகிய நான்கு பேர் மீதும் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து, காப்பகத்தில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் மூவரை தேடி வருகின்றனர்.