உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணி தாமதம் மத்திய அரசு உதவி பெறுவதில் சிக்கல்

 டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணி தாமதம் மத்திய அரசு உதவி பெறுவதில் சிக்கல்

- நமது நிருபர் - தமிழகத்தில், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணி மந்தமாக நடப்பதால், மத்திய அரசின் நிதியுதவி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'பி.எம்.கிசான்' என்ற திட்டத்தில், 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், பயிர் காப்பீடு செய்வோருக்கு, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால், பயிர்கள் சேதமடையும் போது, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. விற்பனை விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல், உளுந்து, பருத்தி போன்ற விளைபொருட்களை, அரசின் நேரடி கொள்முதல் மையங்களில் டோக்கன் பெற்று, குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்பனை செய்கின்றனர். அதேபோல், எந்த பகுதியில் என்ன பயிர், எவ்வளவு பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான உரம், விதைகள் மற்றும் மானிய கருவிகளை, மத்திய அரசு ஒதுக்குகிறது. இவை அனைத்தையும் பெற, விவசாயியின் நிலம், அதில் பயிரிட்டுள்ள பயிரின் வகை மற்றும் பரப்பளவு குறித்த தகவல்கள், டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கப்படுகின்றன. இத்தகவல்களை, தமிழக வேளாண் துறை, 'நம்ம வயல்' செயலி வாயிலாக, 1,300க்கும் மேற்பட்ட துறைசார்ந்த களப்பணியாளர்கள், நேரடியாக விவசாய நிலத்திற்கே சென்று, ஜி.பி.எஸ்., வாயிலாக புகைப்படம் எடுத்து பதிவேற்றுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால், தன்னார்வலர்களும், இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இழுபறி ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் இப்பணியை தமிழகத்தில் முடிக்க வேண்டும். ஆனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருவண்ணாமலை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலுார், தஞ்சாவூர், மயிலாடுதுறை உட்பட பல்வேறு மாவட்டங்களில், இந்த பணி இழுபறியாக உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்க உள்ளது. ஆனால், பணிகள் முடியாததால், மத்திய அரசின் உதவித்தொகை, மானிய உதவிகள், உரங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில், தற்போது, ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 ஆயிரம் பதிவுகள் மட்டுமே நடக்கின்றன. கணக்கெடுப்பு பணியில் பின்தங்கியுள்ள வட்டாரங்கள் குறித்த தகவல்களை பெற்று, அவற்றை விரைவுபடுத்தும் பணியில், கலெக்டர்கள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாதது இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு, உரிய ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், இப்பணியில் ஈடுபட தன்னார்வலர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்