தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் கமகம பிரியாணி விருந்து
திருச்சி:மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன், மக்களுக்கு பிரியாணி விருந்து அளிப்பது, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தைச் சேர்ந்த கதிரவன் உள்ளார். இவர், அமைச்சர் நேருவின் உறவினர். முதல்வர் அறிவித்து செயல்படுத்தும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் போல, 'மக்களுடன் மண்ணச்சநல்லுார் எஸ்.கதிரவன்' என திட்டம் அறிவித்து, மக்களை சந்தித்து வருகிறார். அத்திட்டத்தின் படி, தொகுதியின் 63 கிராம பஞ்சாயத்துகளில், தினமும் ஒரு பஞ்சாயத்துக்கு சென்று, கடந்த 14ம் தேதி முதல், மக்களிடம் எம்.எல்.ஏ., கதிரவன், குறைகளை கேட்டு வருகிறார். மக்கள் சந்திப்புக்குப் பின், கமகமக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை, சிக்கன் கிரேவி, இனிப்பு என அசைவ விருந்து அளிக்கப்படுகிறது. சைவ விருந்தும் போடப்படுகிறது. இதுவரை எட்டு பஞ்சாயத்துகளில் விருந்து முடிந்துள்ளது.வரும் செப்., 30 வரை, இந்த விருந்தை தொடர, எம்.எல்.ஏ., கதிரவன் முடிவு செய்துள்ளதால், தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.