உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் மொழிப்போர் மகாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடிக்கிறது முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தி.மு.க.,வின் மொழிப்போர் மகாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடிக்கிறது முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை:'தி.மு.க.,வின் மொழி உரிமைப்போர், மகாராஷ்டிராவில் போராட்ட சூறாவளியாக சுழன்றடிக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:ஹிந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.,வும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்தி வரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து, இப்போது மகாராஷ்டிராவில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.'தமிழக பள்ளிகளில், மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம்' என, சட்டத்துக்குப் புறம்பாகவும், அராஜகமாகவும் நடந்து கொள்ளும் பா.ஜ., அரசு, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி, இரண்டாம் முறையாக பின்வாங்கியுள்ளது.ஹிந்தி திணிப்புக்கு எதிராக, உத்தவ் தாக்கரே தலைமையில்மும்பையில் நடந்த வெற்றி பேரணியின் எழுச்சியும், பேச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. 'உத்தர பிரதேசம், ராஜஸ்தானில் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன; ஹிந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன;ஹிந்தி பேசாத முன்னேறிய மாநிலங்கள் மீது ஏன் ஹிந்தியைத் திணிக்கிறீர்கள்' என்று, ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு ஹிந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை, நன்றாக அறிவேன். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஒருங்கிணைந்த கல்வித் திட்டநிதி 2152 கோடி ரூபாயை விடுவிப்போம் என்று, தமிழகத்தை பழிவாங்கும் போக்கை, இனியாவது மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா?இதன்பிறகாவது தமிழக பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே மத்திய அரசு விடுவிக்குமா? ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக, தமிழக மக்கள் நடத்தி வரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது, தர்க்கப்பூர்வமானது. இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது; வெறுப்பின்பாற்பட்டது அல்ல.ஹிந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை ஹிந்தி நாடாக்கும் செயல் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமலும், 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும்' என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பிக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மகாராஷ்டிராவின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும், தமிழகத்திற்கும் செய்து வரும் துரோகத்துக்கு, பா.ஜ., பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும், தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் ஒருமுறை கற்பிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை