| ADDED : செப் 03, 2025 12:27 AM
சென்னை:சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, மருந்து நிறுவன உரிமையாளர் அரவிந்த் குமார் தொடர்புடைய 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் வசிப்பவர் அரவிந்த்குமார் ஜெயின். மருந்து நிறுவன உரிமையாளர். இவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம் மற்றும் மருந்து தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். புரசைவாக்கம், கே.கே.நகர், அம்பத்துார் உட்பட 10 இடங்களில் சோதனை நடந்தது. புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்த்குமார் வீடு மற்றும் அலுவலகத்திற்கு, இரண்டு வாகனங்களில் வந்த எட்டு அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்தனர். அவருக்கு சொந்தமான, அம்பத்துாரில் உள்ள மருந்து நிறுவன தொழிற்சாலையிலும் சோதனை நடத்தினர். கே.கே.நகரில் வசித்த ஆடிட்டர் செல்வின், தி.நகரில் வசித்த ஆடிட்டர் விஜயராகவன் ஆகியோர் வீட்டிற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். அப்போது, அவர்கள் இருவரும் இறந்த விபரம் தெரிந்ததும், சோதனை நடத்தாமலே, அமலாக்கத்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். மற்ற இடங்களில் நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முழுமையான விசாரணைக்கு பின், சோதனை முழு விபரம் தெரிவிக்கப்படும் என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.