உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாரை ரிமாண்ட் செய்ய விடிய விடிய ஆவணங்கள் தயாரிப்பு; ஸ்டேஷனை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

போலீசாரை ரிமாண்ட் செய்ய விடிய விடிய ஆவணங்கள் தயாரிப்பு; ஸ்டேஷனை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்கு சென்ற வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலீசாரை, 'ரிமாண்ட்' செய்ய விடிய விடிய ஆவணங்களை, ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் தயாரித்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின், கொலை வழக்காக மாற்றப்பட்டு, குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசாரையும், திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. மாடியில் மட்டும் விளக்கு வெளிச்சத்தில் நள்ளிரவு 1:00 மணி முதல் காலை 4:00 மணி வரை ஆவணங்கள் தயாரித்தனர். திருப்புவனம் நகர் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நீதிபதி வீட்டிற்கு அதிகாலையிலேயே அழைத்துச் சென்று ஆஜர்படுத்த திட்டமிட்டனர். இதற்காக, காவல் நிலையத்தின் முன்புற விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஐந்து பேருக்கும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.காலை 8:00 மணிக்கு திருப்புவனம் நீதிமன்றத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்னிலையில், ஐந்து பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.கைது செய்யப்பட்ட போலீசாரின் உறவினர்கள், திருப்புவனம் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு ஏற்ப தான், போலீசார் செயல்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறினர். கைது செய்யப்பட்ட போலீசாரை நம்பி மனைவி, குழந்தைகள், தாய், தந்தை உள்ளனர் என, கண்ணீர் விட்டு கதறினர்.மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு நேற்று காலை ஆறுதல் சொல்ல, பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா வந்தபோது, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் வருகைக்காக, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசியும் அங்கு காத்திருந்தார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த மரணங்களை சம்பந்தப்படுத்தி, முதல்வர் ஸ்டாலினை குறை கூறி, திலகபாமா பேசினார். அதற்கு எம்.எல்.ஏ., தமிழரசி எதிர்ப்பு தெரிவித்ததுடன், 'துக்க வீட்டில் அரசியல் பேசாதீர்கள்' என கண்டித்தார். திலகபாமா நீண்ட நேரம் அஜித்குமார் வீட்டில் இருந்ததால், அமைச்சர் பெரியகருப்பன் வருகை மதியத்திற்கு மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K V Ramadoss
ஜூலை 02, 2025 12:21

ஞான சேகரனை முதல் காவலில் வெளியே விட்டுவிட்டது,போலீஸ். அந்த சார் யார் என்று அறிவதற்காகவாவது இந்த மாதிரி தடியடி செய்திருக்கலாமே


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 07:01

காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் அவர்கள் தலைகுனிய வேண்டும். ..ஆளத்தெரிந்தோரை ஆள விட்டிருக்க வேண்டும் ..நீட் தேர்வு ரத்து ...நகைக்கடன் ரத்து போன்ற போலி வாக்குறுதிகளை நம்பினால் இப்படித்தான் ...இந்த அக்கப்போரை தொடங்கிவைத்த பெருமை கருணாவை சேரும் ...


c.mohanraj raj
ஜூலை 02, 2025 06:55

இவ்வளவு வேக்கனம் இருக்கும் போலீஸ் அதை முதலிலேயே சரியாகச் செய்திருந்தால் ஒருத்தனுக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் கொடுக்கக் கூடாது


நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:52

கோட்டான்களும் சாத்தான்களும் பதவி பெற்றால் என்னாகும்? இன்னமும் தமிழக ஆட்சியாளர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுவது வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட எல்லாரும் தலைமுதல் வால் வரை கைது செய்யப்படவேண்டும், காவல்நிலையத்தில் தப்பி ஓட முயன்று வழுக்கி விழ வேண்டும் செய்யுமா நீதிமன்றம் ?


Senthoora
ஜூலை 02, 2025 06:32

பஸ் டிரைவர்களை, மது அருந்தி இருக்கிறார்களா என்று பரிசோதிப்பதுபோல, போலீஸ் ஸ்டேஷனிலும் போதைப்பாவனை, மது அருந்திஇருகிறார்களா? என்று திடீர் பரிசோதனை பொலிஸாருக்கு செய்யணும். போலீஸ் நிலைய குற்றசெய்யல் தடுக்கலாம்.