கு.க., செய்த பெண்ணுக்கு மீண்டும் "குவா குவா : ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை : குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்ததால், அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த முருகன் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கும்பகோணம் அரசு மருத்துவமனையில், 1989ல் சரஸ்வதிக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது. பின், 1992ல் சரஸ்வதி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும் சரஸ்வதிக்கு குழந்தை பிறந்ததால், கும்பகோணம் அரசு மருத்துவமனை நஷ்டஈடு வழங்கக்கோரி சரஸ்வதி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய கோர்ட், சரஸ்வதிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மருத்துவமனை சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்தனர். இம்மனு நீதிபதி சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி உத்தரவில், ''குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களில் 2 சதவீதம் பேர் மீண்டும் கர்ப்பமாக வாய்ப்புள்ளதாக கூறுவதையும், குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த மூன்று ஆண்டுகள் கடந்து தான் மனுதாரர் மீண்டும் கர்ப்பமானார் என்பதை ஏற்க இயலாது. எனவே, கும்பகோணம் அரசு மருத்துவமனை நிர்வாகம், மனுதாரருக்கு மூன்று லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.