உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

சென்னை: அரசு துறைகளின் தகவல்கள் மற்றும் திட்டங்களை, செய்தி ஊடகங்களுக்கு எடுத்துரைக்க, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் குறித்து, செய்தி ஊடகங்கள் வாயிலாக சரியான நேரத்தில் பொது மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை செயலர் தீரஜ்குமார், வருவாய் துறை செயலர் அமுதா ஆகியோர் தான் அவர்கள். ராதாகிருஷ்ணனுக்கு எரிசக்தி, மக்கள் நல்வாழ்வு, போக்குவரத்து, கூட்டுறவு, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, கைத்தறி, மனிதவள மேலாண்மை போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ககன்தீப் சிங் பேடிக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், வேளாண்மை, நீர்வளம், சுற்றுச்சூழல், வனம், குறு, சிறு தொழில்கள், தொழில், இயற்கை வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தீரஜ்குமாருக்கு உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அமுதாவிற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், வீட்டுவசதி, நெடுஞ்சாலை, சுற்றுலா, அறநிலையத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் போன்ற துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு துறைகளின் செயலர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை, இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வழங்குவர். அந்த செய்திகளின் உண்மை தன்மையை உறுதி செய்த பின், தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவர். அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்திலும் மக்களிடம் கொண்டு சேர்க்கவே, அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி துறைக்கு இனி என்ன வேலை?

தமிழக அரசின் செய்தி துறை வாயிலாகவே, அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நால்வரை, செய்தி தொடர்பு அதிகாரிகளாக அரசு நியமித்துள்ளது. இதனால், சிறப்பாக செயல்பட்டு வரும் செய்தி துறையில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு துறைகளின் திட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு முன், அவர்களிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செய்தி துறை பணிகளில் சுணக்கம் ஏற்படும். மேலும், அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் பட்டியலில், பொதுப்பணி, வணிக வரி உள்ளிட்ட துறைகள் இடம் பெறவில்லை. இது தொடர்பான சாதனைகள், தகவல்களை யார் வெளியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 15, 2025 03:58

ஓ, மேலும் நான்கு கோபாலபுரம் கொத்தடிமைகளா? அதாவது அவுங்க என்ன சொல்லச் சொல்லுறாங்களோ அதைச் சொல்லுவாங்க. இதுக்கு மக்களின் வரிப்பணத்தில் வெட்டியாய் சம்பளம்.


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 03:57

நாலு மூத்த அதிகாரிகளின் நேரத்தை ஆக்கிரமிக்குமளவுக்கு அவ்வளவு பொய் செய்திகள் வெளியிட வேண்டும். உண்மை சரிபார்க்கும் குழு அதை கண்டுபிடிக்காத அளவுக்கு இருக்கவேண்டும். ஆளுக்கு ஆண்டுக்கு ஒரு கோடியாவது சம்பளம் கொடுப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை