உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 அதிகரிப்பு

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 அதிகரிப்பு

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்தது. இதனால், எப்போதும் இல்லாத வகையில் சவரன் 86,160 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 10,640 ரூபாய்க்கும், சவரன் 85,120 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 159 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 10,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 85,600 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம் 1 ரூபாய் உயர்ந்து, 160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 10,770 ரூபாய்க் கு விற்பனையானது. சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 86,160 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாயும், சவரனுக்கு 1,040 ரூபாயும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இம்மாதம் 1ம் தேதி தங்கம் கிராம் 9,705 ரூபாய்க்கும், சவரன் 77,640 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு 1,065 ரூபாயும், சவரனுக்கு 8,520 ரூபாயும் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை