உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு; திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகரிடம் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு; திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகரிடம் விசாரணை

திண்டுக்கல்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகர் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கநகை கவசங்கள் 2019ல் செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான பணிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள், ஐயப்பன் கோயில் நிர்வாகிகள் மேற்கொண்டனர். கவசங்களை ஒப்படைக்கும்போது அதன் எடை 42.8 கிலோ இருந்தது. பணிகள் முடிவுற்று நகைகள் மீண்டும் தேவசம் அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பின் எடை 38 கிலோ இருந்தது. 4.54 கிலோ தங்கம் மாயமானது. இந்த நகைகள் முறைகேடு தொடர்பாக முன்னாள் மேல்சாந்தி தந்திரி உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு துணை கமிஷனர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், திருவாபரண பெட்டி கமிஷனர் பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவசம் போர்டு நிர்வாக முன்னாள் அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டார். 400 கிராம் தங்கத்தை திருடி கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்ட தங்கநகை வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். சிறப்பு புலனாய்வு போலீசார் தங்க வியாபாரி கோவர்தன், ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை தொடர்ச்சியாக பணப்பரிவர்த்தனை நடந்ததில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ராம்நகர் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் நடத்தும் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. எஸ்.ஐ.டி., டி.எஸ்.பி., சுரேஷ் பாபு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 12:00 மணிக்கு திண்டுக்கல் ராம்நகரில் சுப்பிரமணியன் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தனர். முக்கிய ஆவணங்கள், வங்கிக்கணக்கு, பணபரிவர்த்தனை குறித்தும் விசாரித்தனர். மதியம் 2:20 மணிக்கு விசாரணையை முடிந்து அதிகாரிகள் சென்றனர். பணபரிவர்த்தனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுப்பிரமணியன் கூறியதாவது:

கேரளா எஸ்.ஐ.டி., போலீசார் எதற்காக விசாரித்தனர் என தெரியவில்லை. எனது நண்பர் பாலமுருகன் பெயரில் வாங்கப்பட்ட அலைபேசி எண்ணை நான் பயன்படுத்தி வருகிறேன். இதுதொடர்பாக விசாரித்தனர். நானும், பாலமுருகனும் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். அதுதொடர்பான பணபரிவர்த்தனை, முக்கிய நபர்கள் தொடர்புகள் குறித்து கேட்டனர். நகை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக சொல்லப்படும் நபர்களின் போட்டோவை காண்பித்து கேள்விகள் கேட்டனர். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் டி.மணி என்ற நபரை தேடி வந்துள்ளனர். அந்த நபர், நான் இல்லை என எஸ்.ஐ.டி., போலீசிடம் விளக்கம் தெரிவித்தேன். நேரில் ஆஜராக சம்மன் எதுவும் வழங்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ