சம்பா சாகுபடி மறுநடவுக்கு அரசு உதவி எதிர்பார்ப்பு
சென்னை: 'சம்பா மறுநடவு பணிகளை மேற்கொள்ள அரசு உதவ வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கிய வேகத்தில் கொட்டி தீர்த்ததால், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில், 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. வயல்களில் தேங்கிய வெள்ளம் வடியாததால், நடவு செய்ய முடியாமல், நாற்றுகள் அழுகி வீணாகின. இந்நிலையில், குறுவை நெல் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகியதாலும், சம்பா பயிர்கள் அழிந்ததாலும், விவசாயிகள் பலர் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, சம்பா சாகுபடி மறுநடவு பணிக்கு, தமிழக அரசு உதவ வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். குறுவை சிறப்பு தொகுப்பை போலவே, மறுநடவு பணிக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாய் தருவதுடன், விதை நெல்லை இலவசமாக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.