அரசு பஸ் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஜூலை 27-ல் தேர்வு
மதுரை:போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 27ல் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 2015க்கு பின், புதிய நியமனங்கள் இல்லை. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டும், 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் கடந்த மார்ச்சில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, திருநெல்வேலி 362 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப தேதி ஏப்., 21ல் முடிவடைந்தது. ஏப்., 26 வரை விண்ணப்பத்தை திருத்த அவகாசம் அளிக்கப்பட்டது. இறுதியில், 22,000க்கும் மேற்பட்டோர் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, வரும் 27ல் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. வினாத்தாளை கடந்த முறை போலவே அண்ணா பல்கலை தயாரித்துள்ளது. இத்தேர்வு, சென்னை அண்ணா பல்கலை வளாகம் உட்பட தமிழகம் முழுதும், 15 மையங்களில் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'வரும் 21ம் தேதி முதல், தேர்வர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்து தேர்வு முடிந்த பின், செய்முறை தேர்வு நடைபெறும்' என்றனர்.