உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கன மழை

19 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கன மழை

சென்னை: மேற்கு திசை காற்று மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட, 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோவை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கன மழை பெய்யலாம். நாளை மறுநாளும் கோவை உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் கன மழை தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை 21% அதிகம்

தென்மேற்கு பருவ மழை காலத்தில், ஜூன் 1 முதல் நேற்று வரை, மழைக்கு எட்டு பெண்கள் உள்பட, 40 பேர் இறந்துள்ளனர். மேலும், கால்நடைகள் 232; கோழிகள் 13,500 இறந்துள்ளன. குடிசைகள் மற்றும் வீடுகள் 1,148 சேதம் அடைந்துள்ளன. ஜூன் 1 முதல் நேற்று வரை, 36.9 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பான மழை அளவை விட, 21 சதவீதம் அதிகம். சென்னையில் நேற்று வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில், கன மழையை எதிர்கொள்ள, மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், நிவாரண பணிகளை முழு வீச்சில் செய்யவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை