சென்னை: 'தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை மறுநாள் முதல் கனமழை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா, 7; துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், 6; திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், மூலைக்கரைப்பட்டி, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை ஆகிய இடங்களில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை துவங்கும். இதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.