உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானையை கொன்று எரித்த வழக்கு குற்றவாளியை பிடிக்க ஐகோர்ட் உத்தரவு

யானையை கொன்று எரித்த வழக்கு குற்றவாளியை பிடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை:'தர்மபுரி அருகே யானையை வேட்டையாடி எரித்த விவகாரத்தில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் அருகே, மார்ச், 1ம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

விரிவான அறிக்கை

அதன்படி, கடந்த விசாரணையின் போது, வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையை படித்த நீதிபதிகள், 'நீதிமன்றம் கோரிய விபரங்கள் அறிக்கையில் இல்லை. விசாரணை விபரங்கள் முழுமையாக இல்லை' என, அதிருப்தி தெரிவித்தனர்.இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, யானை உடற்கூறாய்வு விபரங்கள் அடங்கியவிரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அதை பார்த்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த தர்மபுரி மாவட்ட வன அதிகாரி ராஜாங்கத்திடம், 'யானை துப்பாக்கியால் சுடப்பட்டு எரிக்கப்பட்டது என்பதற்கு, என்ன ஆதாரங்கள் உள்ளன' என, ஓரிரு கேள்விகளை எழுப்பினர்.அதற்கு அவர், 'நாட்டு துப்பாக்கியால் யானை சுடப்பட்டு, அதன்பின் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது. யானை வேட்டையாடப்பட்ட இடத்தில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் துணி சிதறல்கள் கிடந்தன.யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் செந்தில் என்பவரை தேடி வருகிறோம்' என்றார்.வனத்துறை தரப்பில், அரசு சிறப்பு பிளீடர் சீனிவாசன் ஆஜராகி, ''யானைகள் இறந்து விட்டால் என்ன மாதிரியாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம். அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படியே, தர்மபுரி யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொல்லப்பட்ட யானை, ஆசிய வகையை சேர்ந்த ஆண்யானை என்பது கண்டறியப்பட்டுள்ளது,'' என்றார்.

தேவையான நடவடிக்கை

இந்த அறிக்கையை ஏற்று, வனத்துறை நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், யானையை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை விரைந்து பிடிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, ஏப்., 3ம் தேதி விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ