உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி மாவட்ட ரிசார்ட்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளா? ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

நீலகிரி மாவட்ட ரிசார்ட்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளா? ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும், 'ரிசார்ட்'களில், இரவில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என, நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி இடம்பெற்ற சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது, 'நீலகிரி மாவட்டத்தில், மசினகுடி உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும், 'ரிசார்ட்'களில், இரவில் அதிக சத்தத்தை எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். இது, வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல; விலங்குகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும்' என, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் சி.மோகன், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதைக்கேட்ட நீதிபதிகள், 'நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும், ரிசார்ட் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது மிகவும் கொடூரமானது. இரவில் தான், விலங்குகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியில் வரும். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது, வனவிலங்குகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும். 'எனவே, தங்கும் விடுதிகளில், என்ன மாதிரியான ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டர், வன அதிகாரி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !