உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீர் தொட்டியில் விபத்து நடந்தால் உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

கழிவுநீர் தொட்டியில் விபத்து நடந்தால் உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை:'தனியார் கட்டிய கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது இறப்பு ஏற்பட்டால், அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, விநாயகபுரத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: விநாயகபுரம் பகுதியில், கழிவுநீர் இணைப்பு இல்லை. சென்னை மாநகராட்சிக்கு, பலமுறை மனுக்கள் அனுப்பியும் இணைப்பு வசதி வழங்கவில்லை. இதையடுத்து, சொந்த செலவில் கழிவு நீர் தொட்டி கட்டினேன். மாநகராட்சி ஊழியர்கள், அவ்வப்போது நிரம்பிய கழிவுநீரை அகற்றுவர். கடந்த 2013 செப்., 30ல், மாநகராட்சி 3வது மண்டல ஊழியர்கள், வீட்டில் நிரம்பிய கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது அருந்தி இருந்த முனுசாமி என்ற ஊழியர், கழிவுநீர் தொட்டியில் திடீரென ஆழமான பகுதிக்குள் இறங்கினார். மற்ற ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்; ஆனால், முடியவில்லை.விஷ வாயுவால் மூச்சுத்திணறி முனுசாமி இறந்த சம்பவம் குறித்து, மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தேன். முதற்கட்டமாக கருணை அடிப்படையில், முனுசாமியின் குடும்பத்துக்கு, 55,000 இழப்பீடாக கொடுத்தேன். பின், முனுசாமியின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, சென்னை மாநகராட்சி, 3வது மண்டல அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். எங்கள் பகுதி முழுதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால் தான், கழிவுநீர் தொட்டி கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிர்ஷ்டவசமானது. என் சொந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்தேன். இந்நிலையில், முழு இழப்பீடு தொகையை வழங்கும்படி, மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரி நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.சி.மணிபாரதி ஆஜராகி, ''தனியாரின் கழிவுநீர் தொட்டியில் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர் தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும். ''இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய விதிகளின்படியே, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என, வாதிட்டார்.இதையடுத்து நீதிபதி, 'மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனிநபரின் இறப்புக்கு பொறுப்பாகி உள்ளார். எனவே, உரிய விதிகளின் அடிப்படையில் தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை, பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது. அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை