தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு அரசு வழங்க ஐகோர்ட் பரிந்துரை
சென்னை:உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பிரசாரத்தால் பாதிக்கப்பட்ட, தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்கு, ஊசி வாயிலாக ரசாயனம் செலுத்தப்படுகிறது என கூறி, பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செங்கல்பட்டு விவசாய நலச் சங்க தலைவர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, தோட்டக்கலை துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், 'தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அதிகாரிகள் வேண்டுமென்றே, பொது மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, இழப்பீடு கோரி விவசாயிகள் அளித்த மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.