உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்பளம் போட்டு மூணு மாசமாச்சு கவுரவ விரிவுரையாளர்கள் கவலை

சம்பளம் போட்டு மூணு மாசமாச்சு கவுரவ விரிவுரையாளர்கள் கவலை

சென்னை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் சிரமத்தில் உள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மே மாதம் தவிர்த்த, 11 மாதங்களுக்கு தலா 25,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

பாதிப்பு

கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே, மே மாத சம்பளமும் இல்லாத நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளன.இதுகுறித்து, தமிழக அரசு கலைக் கல்லுாரி யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர் ஜி.சிவகுமார் கூறியதாவது:அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில், முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் பணியாற்றும், 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் குறித்த விபரத்தை, மே 25ம் தேதிக்குள் அனுப்பும்படி, கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்களுக்கு, மே 15ல் சுற்றறிக்கை அனுப்பினார். அதன்படி பெற்ற விபரங்களின் அடிப்படையில், முதல் சுழற்சிக்கான, 5,699 கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 11 மாதங்களுக்கான தொகுப்பூதியமாக 156.72 கோடி ரூபாயும்; இரண்டாம் சுழற்சிக்கான, 1,661 பேருக்கு, 45.67 கோடி ரூபாயும் கேட்டு, நிதித்துறைக்கு கல்லுாரி கல்வி கமிஷனர் கடிதம் அனுப்பினார்.

நிதி இல்லை

அதற்கான ஒப்புதலை, மே 30 மற்றும் ஜூன் 7ல் நிதித்துறை வழங்கியது. நிதித்துறை ஒப்புதல் அளித்து ஒரு மாதம் ஆன நிலையிலும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான நிதியை, உயர்கல்வி துறை ஒதுக்காததால், கடுமையான நெருக்கடியில் தவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை