உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.300 கோடி இழப்பு; 11 தொழிலாளர்கள் மயங்கியதால் பரபரப்பு

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ரூ.300 கோடி இழப்பு; 11 தொழிலாளர்கள் மயங்கியதால் பரபரப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே திம்ஜேப்பள்ளி பகுதி வன்னியபுரத்தில், 500 ஏக்கரில், 'ஐபோன்' உதிரிபாகங்களை தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு மொத்தம், மூன்று 'ஷிப்ட்'களில் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 85 சதவீதம் பேர் பெண்கள்.நிறுவனத்தில், 6,600 சதுரடி பரப்பில், மொபைல்போன் பின்புற கவர்களின் கலரை வடிவமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் கெமிக்கல் பிரிவான, ஆனோ பிளான்ட் இயங்குகிறது. நேற்று அதிகாலை 5:20 மணிக்கு கெமிக்கல் பிரிவில், 523 ஊழியர்களும், மற்ற பிரிவுகளில், 3,000க்கும் மேற்பட்டோரும் இருந்தனர். அப்போது, கெமிக்கல் பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பரவி கரும்புகை வெளியேறியது. ஊழியர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.கெமிக்கல் கலந்த புகையை சுவாசித்த, 20 முதல் 25 வயது வரையிலான, 11 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பாதிப்பு அதிகமாக இருந்த சதீஷ்குமார், ஆஷா ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு, பெங்களூரு விமான நிலைய பகுதிகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து, 11க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஏழு மணி நேரத்திற்கும் மேல் போராடி, மதியம் 12:30 மணிக்கு மேல் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.தீயை முழுமையாக அணைக்கும் பணி, நேற்று மாலை வரை தொடர்ந்தது. தீ விபத்தில் கெமிக்கல் பிரிவு முற்றிலும் எரிந்து நாசமானதில் நிறுவனத்திற்கு, 300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளர்களை, கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.கெமிக்கல் பிரிவிலிருந்த, 523 தொழிலாளர்களின் மொபைல்போன் எண்ணையும் வாங்கி, அவர்களது உடல்நிலை எந்த அளவிற்கு உள்ளது என விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். வி.ஏ.ஓ.,க்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியை கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை, சப் - கலெக்டர் பிரியங்கா, தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.விபத்தால், நிறுவனத்திற்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இது குறித்து டாடா நிறுவனம் அளித்துள்ள அறிவிப்பில், 'ஓசூரிலுள்ள ஆலையில் துரதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையிலுள்ள அவசரகால நெறிமுறைகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தன. தீ விபத்துக்கான காரணம் அறிய விசாரணை நடக்கிறது. ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்' என தெரிவித்துள்ளது.

அடுத்த சம்பவத்தால் அதிர்ச்சி

ஊழியர்களை ஏற்றிச்சென்ற டாடா நிறுவனத்திற்கு சொந்தமான பஸ், கடந்த 20ல் கெலமங்கலம் கூட்ரோட்டில் பைக் மீது மோதியதில், போடிச்சிப்பள்ளியைச் சேர்ந்த குமார், 42, கணேஷ், 53, ஆகிய இருவர் பலியாகினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த வழியாக வந்த நிறுவனத்திற்கு சொந்தமான, எட்டு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தனர். அச்சம்பவத்தை தொடர்ந்து, நிறுவனத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களில் நடந்த இருபெரும் சம்பவங்களால், டாடா நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

6,000 லிட்டர் கெமிக்கல்

தீ விபத்து ஏற்பட்ட பகுதி கெமிக்கல் பிரிவு என்பதால், ஏ.எப்.எப்.எப்., என்ற கெமிக்கலை நீருடன் கலந்து தான் தீயை அணைக்க பயன்படுத்த முடியும். தீயை கட்டுக்குள் கொண்டு வரும் அளவிற்கு கெமிக்கல் இல்லை என்பதால், பெங்களூரில் இருந்து அவசரமாக, 6,000 லிட்டர் கெமிக்கல் வரை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியது. 20 லிட்டர் கெமிக்கலை, 5,000 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் தான், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என, தீயணைப்புத் துறையினர் கூறினர்.

அலட்சியம் காரணமா?

மொபைல்போனின் பின்புற கவரின் கலரை வடிவமைக்கும் பணி, தயாரிப்பின் மூன்றாவது பிராசஸ். கெமிக்கல் சூடாகும் போது, அதை சரியான அளவில் குளிர்விக்க வேண்டும். அதில் அலட்சியமாக இருந்ததால், கெமிக்கல் அதிகளவில் சூடாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் ராயக்கோட்டை போலீசார், வேறு ஏதாவது காரணமா எனவும் விசாரிக்கின்றனர்.

3,000 லி., கெமிக்கல்இருப்பு: சரயு

கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு கூறியதாவது:டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அங்கிருந்த, 523 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் நடந்த ஒன்றரை மணி நேரத்தில் தீ தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.தீயை அணைக்க, மாநில அளவில் பேசி, மேட்டூர், தர்மபுரி, பெங்களூருவில் இருந்து கெமிக்கல் கொண்டு வரப்பட்டு, 3,000 லிட்டர் கெமிக்கல் இருப்பு உள்ளது. அது தீயணைப்பு பணிக்கு தேவைப்படலாம். காலை, 11:45 மணிக்கு மேல் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. புகை வந்த வண்ணம் உள்ளது.நிறுவன ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா என உறுதி செய்து வருகிறோம். மருத்துவ துறையினர் நேரில் பார்த்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், டி.ஆர்.ஓ., தலைமையில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 234444 என்ற கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொழிலாளர்கள் அழைக்கலாம்.அருகிலுள்ள கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என பார்வையிட, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நிறுவன பணிகள் துவங்குவது குறித்து, டாடா நிறுவனம் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 05:44

சும்மா ஊரு சுத்திட்டு வருவதில்லை இன்வெஸ்ட்மென்ட் கொண்டு வருவது , நம்பிக்கை வைத்து பணத்தை போட்டவனுக்கு தகுந்த உதவி கரத்தை செய்வது அரசின் கடமை , ஸ்ரீபெரும்புதூர் பெக்டரியில் கட்சி ஆட்கள் செய்த ரகளை இன்னமும் நினைவில் உள்ளது , இப்போது இப்படி ஒரு விபத்து , வெளிநாட்டு சதி இதன் பின்னணியில் உள்ளதா என்றும் விசாரியுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை