எல்லாமே முன்தயாரிப்பு தானா?
சட்டசபையில் நேற்று (ஜன.,20) உரை நிகழ்த்த, கவர்னர் ரவி வந்தார். தேசிய கீதம் வாசிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அதை ஏற்காமல் கவர்னர் சபையில் இருந்து வெளியே சென்றார். அவர் சென்றதும், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானத்தை எடுத்து, முதல்வர் ஸ்டாலின் வாசித்தார். கவர்னர் ரவியும் தன் பங்கிற்கு சபையில் இருந்து வெளியேறியதும், அரசின் மீது சில குற்றச்சாட்டுக்களை அடுக்கி அறிக்கை வெளியிட்டார்.முதல்வர் ஸ்டாலின் சபையில் பேசிக் கொண்டிருந்தபோதே, இந்த அறிக்கை வெளியானது. இரு தரப்பும் ஏற்கனவே ஒத்திகை பார்த்ததுபோல, இந்த விவகாரங்கள் அரங்கேறின.அதேபோல், கவர்னர் பிரச்னை எழுப்புவார் என்பதை அறிந்து, சட்டசபை துவங்கியதும், நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விட்டனர். செய்தியாளர் அறையில் இருக்கும், ஒலிப்பெருக்கியையும் அணைத்துவைத்து விட்டனர்.என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தே, கவர்னர் தரப்பும், முதல்வர் தரப்பும் இப்படி செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.