ராமதாசுக்கு இப்படியொரு சோதனையா? ஜி.கே.மணி வேதனை
சென்னை:''ராமதாசுக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது, எங்களுக்கு வேதனையாக உள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது,'' என, பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி கூறினார். அவர் அளித்த பேட்டி: ராமதாஸ் வாழும் காலத்தில், கட்சிக்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது, எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கடந்த, 45 ஆண்டுகளாக அவருடன் பயணம் செய்கிறேன். ஒற்றுமையாகவும், வலிமையாகவும் கட்சியை நடத்தினோம். ராமதாசிற்கு இப்படி ஒரு சோதனை வந்துள்ளது; இது எங்களுக்கு வேதனையாக உள்ளது; மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கினால், அனைவருக்கும் தாழ்வு. இது, எல்லாருக்கும் பொருந்தும். எல்லா கட்சிகளிலும் பிரச்னைகள் வரும். அப்படி வந்தாலும், கூட ஒற்றுமையாக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், பா.ம.க.,விற்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்களை நியமித்து, பொறுப்புகளை வழங்கியவர் ராமதாஸ். கட்சியை துவங்கியவர் அவர் தான்; அவருக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம். பா.ம.க., ஒற்றுமையாக இல்லாவிட்டால் பலவீனம் தான். ஐந்து ஆண்டுகள் முடியப்போகிறது; இனி என் பதவியை பறித்து என்ன நடக்கப் போகிறது? ராமதாஸ் செய்த நியமனம் மட்டுமே சரியாக இருக்கும். நியாயமும், தர்மமும், சத்தியமும், நீதியும் அதுதான். மூன்று எம்.எல்.ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டது, அவர்களது விருப்பம். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.