| ADDED : ஜன 31, 2024 09:44 PM
பிப்ரவரி 1, 1882உத்தரகண்ட் மாநிலம், குமாவுன் கோட்டம், ஜோகர் கிராமத்தில், 1830, அக்டோபர் 21ல் பிறந்தவர் நயின்சிங் ராவத். இவர் பள்ளி படிப்பை முடித்ததும், தன் தந்தையுடன் திபெத் பகுதிகளுக்கு சென்றார்; திபெத் மொழியையும் கற்றார். ஜோகர் பகுதியில் ஜூலை முதல் அக்டோபர் வரை மட்டுமே வசிக்க முடியும்; மற்ற காலங்களில் பனி உறைந்து விடும்.திபெத்துடன் வர்த்தக உறவை மேற்கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, பனி படர்ந்த இமயமலையை அறிய, அதன் வரைபடம் தயாரிக்கதிட்டமிட்டது; அதற்கு இவரை தேர்வு செய்தது. இவர், ஜெர்மன் இன்ஜினியர்களுடன் இணைந்தார்.காத்மண்டில் இருந்து 1,200 கி.மீ., இமயமலையில் பயணித்து, திபெத்தின் தலைநகரம் லாசாவை அடைந்தார். அங்கிருந்து, மானசரோவர் ஏரியை கடந்து நேபாளம் திரும்பினார். பின், ஜம்மு - காஷ்மீரின் லே நகரில் இருந்து லாசா வழியாக அசாம் வரை பயணித்தார்.அனைத்து பகுதிகளின் உயரம், வெப்பநிலை மற்றும் துாரங்களை ஆவணப்படுத்தினார். இமயமலையின் முக்கோண வடிவியலை வரைந்த இவர், 1882ல் தன், 52வது வயதில், இதே நாளில் மறைந்தார்.இமயத்தை அளந்த நயின்சிங் ராவத்தின் நினைவு தினம் இன்று!