டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி மாற்றம்
சென்னை:காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர் கணேசை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த, மாவட்ட நீதிபதி செம்மல் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் என்பவரை சிறையில் அடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்.பி., - டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதி மன்றம், டி.எஸ்.பி., சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது. மேலும், 'சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்த தாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் உத்தரவிட்டப்பட்டது. இந்நிலையில், முன்பகை விவகாரத்தில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்ட, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், அரியலுார் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ளார். இதேபோல, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.வேல்முருகன் - தஞ்சாவூர்; தஞ்சாவூர் முதன்மை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் - புதுக்கோட்டை; புதுக்கோட்டை முதன்மை நீதிபதி ஜெ.சந்திரன் - சேலம் மாவட்டம், மேட்டூர் விரைவு நீதிமன்றம்; சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி - திருப்பத்துாருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.