காரைக்கால் மீனவர் மீது நடுக்கடலில் தாக்குதல் 24 பேர் காயம்: இரு விசைப்படகுகள் பறிமுதல்
காரைக்கால் : காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலதண்டாயுதம் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசை படகுகளில், அக்., 3ல் ஆகாஷ், பாபு உட்பட, 24 மீனவர்கள் இரு விசைப்படகுகளில், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை, ஆந்திரா எல்லையொட்டி மீன்பிடித்து கொண்டிருந்த போது, ஆந்திரா மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர், காரைக்கால் மீனவர்கள் படகில் ஏறி, சரமாரியாக தாக்கி, இரு படகுகளையும் பறித்து சென்றனர். கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர், அக்., 5ல் பைபர் படகில் கோடியக்கரை தென் கிழக்கில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்தனர். அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்களை பட்டாக்கத்தியால் தாக்கி, வலைகள், மொபைல் போன்களை பறித்து சென்றனர். இதில், படுகாயமடைந்த 11 மீனவர்களும் நேற்று அதிகாலை கரை திரும்பினர்; நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதிற்கு, த.மா.கா., தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.