உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்

 உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்

சென்னை : ''உள்ளாட்சி பிரநிதிகள், அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், கெட்டபெயர் தான் கிடைக்கும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். சென்னை மருத்துவ கல்லுாரியில், 192வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வெள்ளை அங்கி மற்றும் 'ஸ்டெதஸ்கோப்' அணிவித்து வரவேற்றார். மேலும், 23.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ கல்வி சார்ந்த, 'வீடியோ' உருவாக்க அரங்கத்தை திறந்து வைத்தார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வை சேர்ந்த மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், த.வெ.க., அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மக்களிடையே கெட்டபெயர் கிடைக்கும். எனவே, மக்களுக்கான சேவையை, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இது தான் முதல்வரின் விருப்பம். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவர்களிடன் பேசி, அதன் நோக்கம் குறித்து புரிய வைப்போம். பல காலமாக, மக்கள் நல்வாழ்வுத் துறையில், ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி வருகின்றனர். படிப்படியாக பணி நிரந்தரம் வழங்கப்படும். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உட்பட, பல இடங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதன் தேவை அதிகமாக இருப்பதால், உடனடியாக, 4,724 செவிலியர்கள் மாவட்ட சுகாதார சங்கம் வாயிலாக பணி அமர்த்தப்படுவர். இதற்கான பணி நியமனம், வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ