20 ரூபாய் லஞ்சம் கொடுத்தவர் 13 ஆண்டுக்கு பின் விடுதலை
திருநெல்வேலி: நீதிமன்ற ஊழியருக்கு நீதிபதி முன்பாக, 20 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பதிவான வழக்கில், 13 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி விடுவிக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன், 51. இவர், 2012 ஜூனில் ஒரு வழக்கில் நாங்குநேரி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற எழுத்தர் மாரியப்பனிடம், 20 ரூபாய் கொடுத்து ஒரு நகலை பெற்றார். இதை கவனித்த நீதிபதி சுந்தரராஜ், முருகன் லஞ்சமாக கொடுத்த இரு 10 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி போலீசாரிடம் புகார் அளித்தார். முருகன், மாரியப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு, 2019ல் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு மாற்றப்பட்டது. விசாரணை, லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது, 2023ல் மாரியப்பன் மரணமடைந்தார். முருகன் வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி ஆர்.சுப்பையா, 'குற்றப்பத்திரிகையில், குற்றவாளி குற்ற நோக்கத்துடன் 20 ரூபாய் வழங்கியதாக எந்த ஆதாரமும் இல்லை. அவர் சட்டப்படி நகல் பெறுவதற்கான கட்டணமாக, 20 ரூபாயை கொடுத்திருக்கலாம். முருகன் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. முருகனை விடுவித்து உத்தரவிடப்படுகிறது' என, தீர்ப்பளித்தார்.