மூன்று மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில், சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யக்கூடும். நாளை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில், சில இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.