உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு; தி.மு.க., மீது இ.பி,எஸ்., குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு; தி.மு.க., மீது இ.பி,எஸ்., குற்றச்சாட்டு

சென்னை: 'முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதிக்கவில்லை. வாய்மூடி தி.மு.க., அரசு மவுனியாக இருக்கிறது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய தேவைக்காகவும், பலமாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் (பொதுப்பணித் துறை) ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். தி.மு.க., ஆட்சியில், இந்த ஆண்டு வழக்கம்போல் முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பு இரு லாரிகளில் கொண்டுசெல்லும் போது வல்லக்கடவு என்ற இடத்தில், கேரள வனத் துறை சோதனைச் சாவடியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன என்று செய்திகள் வருகின்றன.

கொந்தளிப்பு

கேரள நீர்வளத் துறையிடம் (பொதுப்பணித் துறை) அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தங்களுக்கு இதுகுறித்து எந்தத் தகவலும் வராததால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று நேற்றுவரை கேரள வனத் துறை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. இச்செய்தியை அறிந்த, முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட மக்களும் இன்றைக்கு கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

வேடிக்கை

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதை, தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கும், வாய்மூடி மவுனியாக இருக்கும் தி.மு.க., அரசு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி