எம்.டி.எஸ்., சேர்க்கைக்கான நீட் தேர்வில் நேரம் மாற்றம்
சென்னை:நாட்டில் உள்ள பல் மருத்துவ கல்லுாரிகளில், முதுகலை பல் மருத்துவ படிப்பான எம்.டி.எஸ்., சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு, கட்டாய நேர வரம்பை, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ.எம்.எஸ்., நிர்ணயித்துள்ளது. அதாவது, வரும், 19ல் நடக்கும் மூன்று மணி நேர, 'ஆன்லைன்' தேர்வு, இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 கேள்விகள் இடம் பெறும், 'ஏ' பிரிவுக்கு, 75 நிமிடம்; 140 கேள்விகள் உள்ள, 'பி' பிரிவுக்கு, 105 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்தாண்டு தேர்வில், 'ஏ, பி' பிரிவுகளுக்கு, முதல் முறையாக நேர வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல் பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்தால் மட்டுமே, இரண்டாம் பகுதி வினாக்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பகுதிக்கு சென்ற பின், முதல் பகுதியின் கேள்விகளை மதிப்பாய்வு செய்யவோ, பதில்களை மாற்றவோ முடியாது. இந்த தேர்வுக்கான முடிவுகள், அடுத்த மாதம், 19ம் தேதிக்குள் வெளியாகும்.