உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுக்குமாடி குடியிருப்புகளில் பணியிட அரங்கு  வீடு வாங்குவோருக்கு கிடைக்கிறது புதிய வசதி

அடுக்குமாடி குடியிருப்புகளில் பணியிட அரங்கு  வீடு வாங்குவோருக்கு கிடைக்கிறது புதிய வசதி

சென்னை:அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் சமுதாய கூடம், விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் போன்று, பணியிட அரங்கு எனப்படும், புதிய வசதி அறிமுகமாகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்பம், நிதி மேலாண்மை தொடர்பான அலுவலகங்கள் அதிகரித்துள்ளன. இதில், பன்னாட்டு அளவில் பிரபலமான நிறுவனங்கள், தமிழகத்தில் அலுவலகம் அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. செலவு குறைகிறது இதற்காக, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அடுக்குமாடி அலுவலக வளாகங்கள் பரவலாக கட்டப்படுகின்றன. இருப்பினும், இந்நிறுவனங்களின் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற இடவசதியை, முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில், 2020ல் கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலான போது, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை மேற்கொள்ள அறிவுறுத்தின. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையிலும், பல்வேறு நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன. இதனால், பணியாளர்களுக்கான இடவசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட வகைகளில் ஏற்படும் செலவு குறைகிறது. தனியார் நிறுவனங்கள், 'கோ ஒர்க்கிங் ஸ்பேஸ்' என்ற பெயரில் கட்டணம் செலுத்தி பயன்படுத்த கூடிய பணியிட அரங்குகளை ஏற்படுத்தி வருகின்றன. அதிக செலவில் அலுவலகம் அமைக்க முடியாத நிலையில் உள்ள சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, பெரிய நிறுவனங்களும் கூட, இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளன. அரசு நிறுவனங்களும் வருவாய் நோக்கில் பணியிட அரங்குகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் கட்டுமான நிறுவனங்களும், பணியிட அரங்குகளை அமைப்பதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன. இதன்படி, 100 வீடுகளுக்கு மேற்பட்ட திட்டங்களில், நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம், சமுதாய கூடம் போன்று, பணியிட அரங்குகளை கட்டுமான நிறுவனங்கள் அமைக்கின்றன. வரவேற்பு கிடைக்கும் இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி திட்டங்களை செயல்படுத்தும் போது, அதில், மக்களின் தேவை அடிப்படையிலேயே பல்வேறு வசதிகளை செய்கின்றன. அந்தந்த காலச்சூழல் அடிப்படையில் எழும் தேவைகளுக்கு ஏற்ப, இந்த வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில், பணியிட அரங்கு வசதியை அமைப்பதால், அங்கு வீடு வாங்குவோருக்கு கூடுதல் பயன் ஏற்படும். வீட்டில் வைத்து அலுவலக வேலைகளை செய்ய முடியாதவர்கள், இந்த வசதியை பயன்படுத்தலாம். அலுவல் ரீதியான சந்திப்புகளுக்கும், இந்த அரங்கை பயன்படுத்தலாம் என்பதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். முன்னணி கட்டுமான நிறுவனங்கள், திட்ட வரைபட நிலையிலேயே இந்த வசதியை சேர்க்க முன்வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறி னார்.

என்னென்ன வசதி?

கட்டுமான வல்லுனர்கள் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், பணியிட அரங்குக்காக குறைந்தபட்சம், 500 சதுர அடி வரை இடம் ஒதுக்கப்படுகிறது. இதில், அலுவலகங்களில் இருப்பது போன்று நாற்காலிகள், மேஜைகள் அமைப்பதுடன், 'ஏசி' மற்றும் 'வைபை' அதிவேக இணையதள வசதி ஏற்படுத்தப்படும். தேவைப்படும் நபர்கள், மடிக்கணினியை எடுத்து வந்து, இங்கு அலுவலக பணிகளை முடிக்கலாம். அலுவலர் ரீதியான சந்திப்புகளை மேற்கொள்ள, பணியாளர்கள் கூட்டம் நடத்த, சிறிய கூட்ட அரங்கு இதில் அமைக்கப்படும். இதை அந்தந்த குடியிருப்புகளின் உரிமையாளர் சங்கங்கள் பராமரித்து, வருவாய் ஈட்டவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ