ரயில் முன்பதிவு புதிய அட்டவணை அமல்
சென்னை:ரயில்கள் புறப்படுவதற்கு, எட்டு மணி நேரம் முன்பு, பயணியர் முன்பதிவு அட்டவணை வெளியிடுவது, இன்று முதல் தெற்கு ரயில்வேயில் அமலாகிறது.விரைவு ரயில்கள் புறப்படுவதற்கு, நான்கு மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், இறுதி நேரத்தில் 'டிக்கெட்' உறுதியாகாமல், பயணத்தை மாற்றி அமைக்க, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் எட்டு மணி நேரத்துக்கு முன்பாக, முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என, ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு, துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, முன்பதிவு அட்டவணை தயாரிப்பு குறித்த விபரத்தை, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் செயல்படுத்தி வருகின்றன.அந்த வகையில், தெற்கு ரயில்வேயில், எட்டு மணி நேரத்துக்கு முன்பு, பயணியர் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை, அமலுக்கு வருகிறது.