உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு: பைசல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்

அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு: பைசல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் அதிகாரிகளை கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணியில் தவறு செய்தால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். குறிப்பிட்ட காலத்திற்கு பின் மீண்டும் பணியில் சேர்வதும் உண்டு. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும். அவர்களின் ஓய்வு நாளுக்குள் அதற்கு தீர்வு கண்டால், முறையாக ஓய்வு பெறுவர். இல்லையெனில், பாதி சம்பளத்தை தவிர, வேறு எந்த பணப்பலனையும் பெற இயலாது. பணிக்கால தவறுகள் ஊழியரின் ஓய்வுக்கு பின் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது, 4 ஆண்டுகளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்காண்டுகளை கடந்து விட்டால், நடவடிக்கைக்கு உள்ளாக மாட்டார்கள். இதுபோன்ற பிரச்னைகள் அடிக்கடி சில துறைகளில் உயரதிகாரிகளுக்கு வருகின்றன. ஓய்வு பெற்ற ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மீது, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, காலக்கெடு முடிந்த பின் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது எனக்கூறி, மேலதிகாரிகளின் ஒப்புதலுக்கு கோப்புகள் வருகின்றன. இதுபோன்ற நிலையில், தாமதத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. உள்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார், அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் ஆக., 29ல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளாமல், தாமதம் செய்து காலக்கெடு முடிந்தபின், அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. குற்றச்சாட்டுகள் மீது மேல்நடவடிக்கையை கைவிடவும் என, தலைமை செயலகத்தின் சில துறைகளில் இருந்து விஜிலன்ஸ் ஆணையத்திற்கு கருத்துருக்கள் அனுப்பப்படுகின்றன. இதை தவிர்க்க, ஓய்வு பெற்ற, குற்றம்சாட்டப்பட்ட ஊழியர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அவ்வாறு காலக்கெடுவுக்குள் எடுக்காமல், மேல்நடவடிக்கையை கைவிட ஒப்புதலுக்கு வைக்கும் கோப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். காலதாமதம் ஏற்பட அலுவலர்கள் காரணமா என்று கண்டறிய வேண்டும். எங்கு காலதாமதம் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
செப் 07, 2025 07:19

ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போய், அவர்கள் இவர்களுடன் சேர்ந்து செய்த கூட்டுக் களவாணித்தனங்களை போட்டு உடைத்து விட்டால் என்ன செய்வதாம்?


VENKATASUBRAMANIAN
செப் 06, 2025 08:05

லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள். எப்படி வேலை செய்வார்கள். இந்த மாதிரி அதிகாரிகளை உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள். மற்றவர்கள் வாங்க மாட்டார்கள்.


Kasimani Baskaran
செப் 06, 2025 07:21

கள்ளர்களின் தோழர்கள் கள்ளர்களை காட்டிக்கொடுக்க தயங்குகிறார்கள். சம்பந்தமில்லாதவர்களை வைத்து விசாரிக்க வேண்டும். கூட்டமாக சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்கள் மதிப்பிடப்பட வேண்டும். நேர்மையாக இயங்கும் அரசு அலுவலகத்தை காண்பது சிரமம். இதே நிலை நீடித்தால் இந்தியா வீழ்வது நிச்சயம். உலகமயமாகுதலில் வாய்ப்புகள் ஏராளம். தமிழகத்தை விட பரப்பளவில் குறைவான ஜப்பானால் உலகுக்கே சவால் விட முடிகிறது என்றால் உலகில் அதிக மக்கள் தொகை உள்ள இந்தியாவால் உலகை வெல்வது மிக மிக எளிது - அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் பொழுது.


D Natarajan
செப் 06, 2025 06:13

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கையும் களவுமாக பிடிபட்டவுடன் , உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் . எதற்கு விசாரணை .


Varadarajan Nagarajan
செப் 06, 2025 05:48

துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையெடுத்தால் பல அரசு ஊழியர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. யாரை எப்படி கவனித்தால் நடவடிக்கையை கேன்சல் செய்துவிட்டு பணியில் சேரலாம் என்பதும் அல்லது பணிக்காலத்திற்குப்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் கோப்பை மூடமுடியும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.


முக்கிய வீடியோ