உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜாதி கலவரங்களை தடுக்க ஒலிம்பிக் மையங்கள்

 ஜாதி கலவரங்களை தடுக்க ஒலிம்பிக் மையங்கள்

சென்னை: ''தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடக்காமல் இருக்க, விளையாட்டை ஊக்குவிக்க, திருநெல்வேலி, பரமக்குடி போன்ற ஊர்களில், சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும்,'' என, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்: தி.மு.க., - கதிரவன்: பரமக்குடி நகரை சேர்ந்த கபடி, தடகளம், கூடைப்பந்து போட்டி வீரர்கள், மாநில, மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், பரமக்குடியில் ஒரு நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு அரங்கம் இல்லாமல், பயிற்சியை மேம்படுத்துவதில் பிரச்னை இருக்கிறது. பரமக்குடி தொகுதிக்கு, நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பரமக்குடியில், 10, 15 ஆண்டுகளாக கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று உள்ளேன். 10 ஒலிம்பிக் மையங்களை உருவாக்க உள்ளோம். ராமநாதபுரத்திற்கான மையம், பரமக்குடியில் தான் வரப் போகிறது. தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடக்காமல் இருக்க, விளையாட்டை அதிகப்படியாக ஊக்குவிக்க, திருநெல்வேலி, பரமக்குடி போன்ற ஊர்களில், சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் மையங்கள் உருவாக்கப்படும். தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் நடக்காமல் இருக்க, அதிகப்படியான விளையாட்டு போட்டிகளும், விளையாட்டு திட்டங்களும், மிகப்பெரிய வசதிகளும் உருவாக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. பினாமிகளை பிடித்து உள்ளே போடுங்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேலும் பேசியதாவது: அரசின் வளங்கள், அரசு கஜானாவுக்கு வர வேண்டும். ஆனால், இன்று அரசியல்வாதிகள் கையில் உள்ளது. அது, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களாக இருக்கலாம். தி.மு.க., பதற்றப்படக் கூடாது. எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை. முன்னாள் அமைச்சர்களின் பினாமிகளாக இருக்கும் மலைகளை, மக்கள் சொத்துக்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'சீல்' வைத்தால், செயற்கையாக ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்களை முடக்குகின்றனர். விலை உயர்வதாக கூறுகின்றனர். முதலில் பினாமிகளை பிடித்து உள்ளே போட வேண்டும். அங்கே அடித்தால், யார் குரல் கொடுக்கின்றனரோ, யார் எழுந்து பேசுகின்றனரோ, அங்கு தான் ஆதாரம் இருக்கிறது. மக்கள் முன் ஆதாரம் கொடுத்து விட்டால் போதும். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க.,வின் பலம் பலவீனம் எனக்கு தெரியும் சட்டசபையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு எடுக்கும். தி.மு.க.,வின் பலம், பலவீனம் எனக்கு தெரியும். கடந்த, 2020ல், எட்டு வழிச்சாலைக்கு எதிராக, தி.மு.க., போராட்டம் நடத்தியது. எல்லா போராட்டங்களின் பின்னணியிலும், நானும் வேலை செய்தேன் என்ற முறையில் எனக்கு தெரியும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடனே, 'நாங்கள் எட்டு வழிச்சாலைக்கு போராடவில்லை' என்றனர். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்ததும், எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு. ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு எடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி