கண்ணில் பட்டாசு துகள் விழுந்தால் தேய்க்காதீர்கள்! கண் மருத்துவர் அறிவுரை
சென்னை: ''பட்டாசுகள் வெடிக்கும்போது வெடி மருந்து, தீப்பொறி கண்களில் பட்டால், கண்களை தேய்க்க வேண்டாம்,'' என, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் தங்கராணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர கால அறுவை சிகிச்சை அரங்கமும் தயார் நிலையில் உள்ளது.பட்டாசுகளால் கண்களில் லேசான எரிச்சல், கண் விழிப்படலத்தில் சிராய்ப்பு போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் கண் பார்வை இழப்பு கூட ஏற்படலாம். எனவே, தள்ளி நின்று பட்டாசுகள் வெடிப்பது முக்கியம்.பட்டாசு வெடிக்கும்போது, தீப்பொறி, வெடி மருந்து உள்ளிட்டவை கண்களில் பட்டால், கண்களை தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால், ரத்தக் கசிவு ஏற்பட்டு, கண் பார்வை இழப்பு அபாயம் ஏற்படும். எனவே, அவ்வாறு செய்யாமல், கண்களையும், முகத்தையும், சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கண்களில் பெரிய அளவில் ஏதேனும் குத்திக் கொண்டிருந்தால், அவற்றை அகற்ற முயற்சிக்காமல், மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.