திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உத்தரவு
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு அறங்காவலர்கள் குழுவை 4 மாதங்களில் நியமிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 பேர் கொண்ட அறங்காவலர் குழுவை சட்டப்படி நியமிக்க வேண்டும். அதில் ஒரு பெண், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர் இடம்பெற வேண்டும். இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழு நியமனம் செய்யப் பட்டது. திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2021 ல் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் முடிந்த நிலையில் புது அறங்காவலர் குழுவை நியமிக்கவில்லை. விதிகளை மீறி தக்கார் மூலம் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. மக்கள் பிரதிநிதிகளான அறங்காவலர் குழு இல்லாமலேயே கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அறங்காவலர் குழுவை நியமிக்க வலியுறுத்தி அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜரானார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்: திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடந்தது. தற்காலிக ஏற்பாடாக நன்கொடையாளர் ஒருவர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ளார். அறங்காவலர் குழு 4 மாதங்களில் நியமிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விண்ணப்பங்களை பெற்று, பரிசீலித்து 4 மாதங்களில் அறங்காவலர்கள் குழு நியமிக்கப்படுவதை அறநிலையத்துறை செயலர் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.