உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலந்தை மரங்கள் குறைந்ததால் அழியும் பொன் வண்டுகள் மீட்கும் முயற்சியில் இயற்கை விவசாயிகள்

இலந்தை மரங்கள் குறைந்ததால் அழியும் பொன் வண்டுகள் மீட்கும் முயற்சியில் இயற்கை விவசாயிகள்

நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், இலந்தை மரங்கள் வளர்ப்பு குறையும் நிலையில், அதை சார்ந்து இருந்த பொன் வண்டு இனம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்த இலந்தை மரங்கள், தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றன. கடுமையான வறட்சியை கூட தாங்கி வளரும் இலந்தை மரங்களை, ஒரு காலம் வரை பரவலாக பார்க்க முடிந்தது. காடுகள் அழிக்கப்பட்டு ஊர், நகரங்கள் உருவாக்கப்படும் நிலையில் இலந்தை மரங்களை மக்கள் மறந்து விட்டனர். புதிதாக மரங்கள் வளர்ப்பு என்று வரும் போது, வாழை, தென்னை, மா, பலா, கொய்யா போன்ற பணப்பயன் தரும் மரங்களையே பலரும் நடுகின்றனர். இதில், இலந்தை மரங்கள் விடுபட்டதால், அதை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து விட்டது.

பிடித்து விளையாடுவர்

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வரை, பள்ளி பருவத்தில் இலந்தை பழம் சாப்பிடாத, பொன் வண்டுகளை பிடித்து விளையாடாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இலந்தை பழமும், பொன் வண்டுகளும் பிரசித்தம். பொதுவாக இலந்தை மரங்கள் உள்ள இடங்களில், பொன்வண்டுகள் தவறாமல் காணப்படும். தற்போது இலந்தை மரங்களை வளர்ப்பது குறைந்ததால், அதை சார்ந்து இருந்த பொன் வண்டுகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, கோவை தடாகம் பகுதியை சேர்ந்த பேராசிரியரும், இயற்கை விவசாயியுமான, சி.ஆர்.ஜெயபிரகாஷ் கூறியதாவது: அதிகபட்ச வறட்சியை தாங்கி வளரக்கூடிய இலந்தை மரங்கள், நகரமயமாக்கல், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் குறைந்துள்ளன. தடாகம் பகுதியில், 20 ஆண்டுகளாக இலந்தை மரங்களை வளர்த்து வருகிறோம். பருவம் தவறிய மழை பெய்தால் கூட, இலந்தை பழங்கள் பிஞ்சிலேயே உதிரும் நிலை ஏற்படுகிறது. அதிக முள் இருக்கும் என்பதால், பெரும்பாலான விலங்குகள் இதை நெருங்காது, பொன் வண்டுகள் இதன் இலையை விரும்பி உண்ணும். நம் நாட்டில் காணப்படும், 15,400 வகை வண்டு இனங்களில், பொன் வண்டுகள் மக்களுடன் மிக நெருக்கமாக இருந்தவை.

ரசிப்பர்

விஷம் இருக்காது என்பதால், சிறு வயதில் பலரும் இந்த வண்டுகளை ஆசையாக பிடித்து, அதன் கழுத்தில் மெல்லிய நுாலை கட்டி, அது பறப்பதையும் பார்த்து ரசிப்பர்; தீப்பெட்டியில் அடைத்தும் விளையாடி இருப்பர்.இதன் தலை பகுதியின் பின்புறம், மின்னும் தன்மையுடன் வெளிர் பச்சை நிறம் காணப்படும். இலந்தை மரங்கள் குறைந்ததால், அதை நம்பி இருந்த பொன் வண்டுகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலந்தை மரங்களை வளர்ப்பதால், மனிதர்களுக்கு உணவு, வணிகம், மருத்துவம் சார்ந்த பல்வேறு பயன்கள் கிடைக்கும். அத்துடன் பொன் வண்டுகளும் வாழும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மரம் நடும் பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்க, மரக்கன்றுகள் அளிக்கப்படுகின்றன. பொன் வண்டுகளை பாதுகாக்கும் வகையில், இலந்தை மரங்களை வளர்ப்பது நல்ல வழிமுறை. எனவே, இலந்தை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தினசரி பராமரிக்க முடியாத இடங்களில், இலந்தை மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dharmavaan
ஜன 11, 2025 07:53

பொன் வண்டினால் மக்களுக்கு /..விவசாயிகளுக்கு என்ன நன்மை சிறுவர் விளையாடுவது ஒரு ஜீவ ஹிம்சை எதற்கும் உதவாத ஒன்றை ஆதரப்பதன் காரணம் என்ன