உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் உரையாற்ற கூடாது என திட்டமிட்டு அரசு செயல்படுகிறது: பழனிசாமி குற்றச்சாட்டு

கவர்னர் உரையாற்ற கூடாது என திட்டமிட்டு அரசு செயல்படுகிறது: பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை : தி.மு.க., ஆட்சியில் கவர்னர் உரை என்பது, சபாநாயகர் உரையாக மாறி விட்டதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த மாணவியரிடம், கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்துக்கொண்டு அனுமதித்துள்ளனர். அந்த அளவுக்கு கருப்பை கண்டு, முதல்வர் பயந்து போய் இருக்கிறார்.தமிழகம் முழுதும் தங்கு தடையின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, தி.மு.க., அரசு எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்திருந்தால், போதையிலிருந்து இளைஞர்களை காப்பாற்றியிருக்கலாம். கஞ்சா போதையால்தான், சிறுமியர் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. தி.மு.க., ஆட்சியில், கவர்னர் உரை என்பது சபாநாயகர் உரையாக மாறியுள்ளது. காற்றடித்த பலுான் போல காட்சி அளிக்கும் கவர்னர் உரையில் எதுவும் இல்லை. தி.மு.க., அரசின் சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் வாசகங்களே உள்ளன.கவர்னர் உரையாற்றக் கூடாது என்று திட்டமிட்டு, தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு, மூன்று முறை, தி.மு.க., அரசின் அவலங்களை ஆதாரங்களுடன் கவர்னரிடம் புகார் தெரிவித்தோம்; ஆனாலும் நடவடிக்கை இல்லை. அதனால்தான், அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில், சட்டப்படி தீர்வு காண வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., வழக்கறிஞர் வரலட்சுமி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அண்ணா பல்கலை விவகாரத்தில், தி.மு.க., அரசு துாங்கி கொண்டிருப்பதை அம்பலப்படுத்தவே, சட்டசபைக்குள் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றோம். 'யார் அந்த சார்?' என்று கேட்டால், தி.மு.க., அரசு பதற்றம் அடைவது ஏன் என்பது தெரியவில்லை. யாரையோ காப்பாற்ற, தி.மு.க., அரசு முயற்சிக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், 'யார் அந்த சார்?' என, அனைவரும் கேட்கின்றனர். இவ்விவகாரத்தில், இதுவரை முதல்வர் ஸ்டாலின் எதுவும் கூறவில்லை. தவறு நடந்து விட்டது என்ற குற்ற உணர்வால்தான் அவர் எதுவும் பேசவில்லை.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Guna Gkrv
ஜன 07, 2025 06:34

உங்களை போன்று பயத்தில் ஆட்சி நடத்தினால் எல்லாருக்கும் பயப்பட வேண்டும், நாங்கள் நேர்மையாகி ஆட்சி செய்கிறோம் நாங்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? நீங்கள் ஆட்சியில் இருந்தால் இதுவரை 100 முறை டெல்லி போய் வந்திருப்பீர்கள் நாங்கள் அப்படி அல்ல யாருக்கும் பயப்படவேண்டாம்.


சமீபத்திய செய்தி