அ.தி.மு.க., மாவட்ட செயலர்களுடன் பழனிசாமி திடீர் ஆலோசனை
சென்னை : பிரசார பயணம் தொடர்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலர்களுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக கடந்த ஜூலை 7ம் தேதி முதல் பழனிசாமி பயணம் செய்து வருகிறார். இதுவரை நான்கு கட்டங்களில், 170க்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில் பிரசார பயணத்தை முடித்துள்ளார். ஐந்தாம் கட்ட பயணத்தை, வரும் 10ம் தேதி ஈரோட்டில் துவக்குகிறார். இந்நிலையில் சென்னை மாநகர், புறநகரில் உள்ள சட்டசபை தொகுதிகளில், பிரசார பயணம் மேற்கொள்வது குறித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். கரூர் துயர சம்பவத்திற்கு பின், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், 'ரோடு ஷோ' நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, நெரிசல் மிகுந்த சென்னை மாநகர் மற்றும் புறநகரில், பழனிசாமியின் பிரசார பயணத்தை எப்படி நடத்துவது, சட்டசபை தொகுதிக்கு அல்லது மாவட்டத்திற்கு ஒரு பொதுக்கூட்டம் நடத்தலாமா அல்லது ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், பெரிய அரங்கில் மக்களை சந்திக்கலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடத்த, விசாலமான மைதானம் போன்ற இடங்களை அடையாளம் காணுமாறு, மாவட்டச் செயலர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தபோது, சென்னை மாநகர், புறநகரில் கட்சிப்பணிகள் தொய்வில் இருப்பது குறித்து பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை கேட்டறிந்த பழனிசாமி, சென்னையில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், அனைத்து தரப்பினரும் வசிக்கின்றனர். அதிக தொகுதிகளும் உள்ளன. எனவே, அலட்சியமாக இல்லாமல் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.