சென்னை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துஉள்ளது.தமிழகத்தில் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளின் தாக்கத்தை குறைக்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டம், 2021ல் துவங்கப்பட்டது.இதில், 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் தடுப்பு சிகிச்சை செவிலியர்கள், 463 'பிசியோதெரபிஸ்ட்'கள், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். திரவ பைகள்
இவர்கள் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள் வழங்குதல், பிசியோதெரபி சிகிச்சை மற்றும் தொடர் டயாலிசிஸ் திரவ பைகள் வழங்குதல், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து, தொடர் சிகிச்சைக்கு உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.இத்திட்டத்தில், 2.25 கோடி பயனாளிகள் முதல் முறை சிகிச்சையும், 4.44 கோடி பேர் தொடர் மருத்துவ சேவைகளையும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும சர்க்கரை நோயாளிகள் பலர், அரசு மருத்துவமனைகளுக்கு வரத் துவங்கி உள்ளனர். ரூ.3,000 செலவு
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து இதுவரை, 721 கோடி ரூபாயை அரசு செலவிட்டு உள்ளது. இத்திட்டத்தில், புதிதாக நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மற்ற தீவிர பாதிப்புக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் மாதம், 3,000 ரூபாய் வரை மருத்துவ செலவு செய்து வந்தவர்கள், இத்திட்டத்தில் வீடுகளுக்கே மருந்து, மாத்திரைகள் வருவதால், அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும், 45.5 சதவீத உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, 33.9 சதவீதமாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, 54.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.இத்திட்டத்தால், தொற்றா நோய் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இவர்கள் முறையாக மாத்திரை, மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன், டாக்டர் பரிந்துரைப்படி உடற்பயிற்சி செய்வதும், உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வதும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.