மேலும் செய்திகள்
எம்ஜிஆர் நடித்த இதயக்கனி: தியேட்டரில் பார்த்து ரசித்த இபிஎஸ்
6 hour(s) ago | 2
ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் திட்டத்தில், போலி கார்டுகளை கண்டறிய முதற்கட்டமாக, பெயர்கள், முகவரி உள்ளிட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒரு கோடியே 96 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், அரிசி வழங்குவதற்கான பச்சை கார்டுகள், 1.84 கோடியும், சர்க்கரை அதிகம் வழங்க, 10.67 லட்சம் கார்டுகளும், 60 ஆயிரம் போலீஸ் கார்டுகளும், 62 ஆயிரம் கவுரவ கார்டுகளும் உள்ளன. இவற்றில், 8.37 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையே, 7.21 கோடி தான். இதனால், ஒரு கோடி பேர் வரை ரேஷன் கார்டுகளில், போலியாக பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், போலியாக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, அனைத்து ரேஷன் கார்டுகளிலும் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை, அந்தந்த மண்டல அலுவலக கம்ப்யூட்டர்களில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை உயரதிகாரி கூறியதாவது: அடிக்கடி வீடுகளை மாற்றும் பொதுமக்கள், தங்கள் கார்டுகளில் முகவரிகளை மாற்றுகின்றனர். இதேபோல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் பிழை திருத்தம் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இந்த திருத்தங்களை, உணவு வழங்கல் துறை அலுவலகம் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள், பதிவேட்டில் மட்டும் மாற்றுகின்றனர். பலநேரங்களில் கம்ப்யூட்டரில் மாற்றுவதில்லை. இதனால், போலி உறுப்பினர்கள் மற்றும் போலி கார்டுகள் அடையாளம் தெரிவதில்லை. இதுமட்டுமின்றி பலர் முகவரி மாறினாலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் தேவையில்லை என்றால், முகவரிகளை மாற்றாமல் விட்டு விடுகின்றனர். இதனாலும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு கொண்டு வரவிருக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் திட்டத்தில், அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதன் முதற்கட்டமாக, அனைத்து ரேஷன் கார்டுகளின், பெயர், முகவரி போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களிலும், பின், தலைமை அலுவலகத்திலும் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பணி முடிந்ததும், அனைத்து மண்டல கம்ப்யூட்டர் சர்வர்களும், ஆன்டலைனில் தலைமை அலுவலக கம்ப்யூட்டர் சர்வரில் இணைக்கப்பட்டு, போலிகளை கண்டறிந்து ஒழிக்க, அரசு முடிவு செய்துள்ளது. 'ஏற்கனவே, கடந்த ஆண்டில், உணவு வழங்கல் துறை எடுத்த நடவடிக்கையில் மட்டும், 20 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு கோடி பேர் போலியாக இருப்பதால், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலிகளில் பெரும்பாலான கார்டுகள், அரசியல் கட்சியினர் வைத்திருப்பதும், ஆய்வில் தெரியவந்துள்ளது' என, உணவு வழங்கல்துறை அதிகாரி கூறினார்.
நமது சிறப்பு நிருபர்
6 hour(s) ago | 2