சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்
சென்னை: சாலை பாதுகாப்புக்கான தரவு தளத்தை, நாடு முழுதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆர்.ஜி.பி., ஆய்வகம், ஒடிஷா மாநிலத்துடன் இணைந்து, சாலை பாதுகாப்புக்காக, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு தரவு தளத்தை உருவாக்கியது. இந்த தரவு தளம், பல துறைகளில் இருந்து தரவுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதனால், ஆபத்து நேரங்களில் தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு தரவு தளம், ஒடிஷா மாநில சாலை பாதுகாப்பில் வெற்றி கண்டுள்ளது. இதை நாடு முழுதும் விரிவுப்படுத்த தயார் நிலையில் இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது: சாலை பாதுகாப்பில், ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டு பிடிப்புகள் எப்படி சேவை வழங்கும் என்பதற்கு, 'ஆர்.ஜி.பி., உருவாக்கிய தரவு தளம் உதாரணம். சாலை பாதுகாப்பு மேலாண்மையை கணிசமாக வலுப்படுத்தும் இந்த தரவு தளம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சேவைக்காக தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.