போதைப்பொருள் வழக்குகளில் ரூ.36 கோடி அபராதம் உயர் நீதிமன்றத்தில் தகவல்
மதுரை:தென்காசி மாவட்டம், காளத்திமடம் ஆனஸ்ட்ராஜா, தடை செய்யப்பட்ட கூல் லிப் புகையிலை போதைப்பொருளை பெங்களூருவிலிருந்து கடத்தி வந்ததாக கடையம் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான ஆனஸ்ட்ராஜா ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அளித்த உத்தரவு: அதிக கூல் லிப் போன்ற போதைப்பொருட்களை தமிழக அரசு பறிமுதல் செய்து வருகிறது. கூல் லிப்பை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மயங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் தொடர் சம்பவங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.இது பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூல்லிப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தயாரித்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.மத்திய அரசின் சுகாதாரத்துறை, தமிழக பள்ளிக் கல்வித்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, கூல்லிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹரியானா, கர்நாடகாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக இணைத்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புகிறது. மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி நேற்று இந்த வழக்கை விசாரித்தார். தமிழக அரசு தரப்பு, 'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக 9 மாதங்களில் 19,800 கடைகள் மூடப்பட்டுள்ளன. 132 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 36 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே போதைப்பொருளை தடுக்க முடியும்' என, தெரிவித்தது.மத்திய அரசு மற்றும் நிறுவனங்கள் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி செப்., 25க்கு விசாரணையை ஒத்திவைத்தார்.