உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ. மோதலே தர்மஸ்தலா பிரச்னைக்கு காரணம்: கர்நாடக துணை முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ. மோதலே தர்மஸ்தலா பிரச்னைக்கு காரணம்: கர்நாடக துணை முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''தர்மஸ்தலா விவகாரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. இடையேயான மோதலே காரணம்,'' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.

கோவையில் நடந்த, இந்தியா டுடே தென்னிந்திய மாநாட்டில், அவர் பேசியதாவது:

முதல்வர் பதவி போட்டியில் இருப்பது யார்; அடுத்த முதல்வர் யார் போன்ற கேள்விகளுக்கு தனி நபர்களிடம் பதில் தேடுவது அர்த்தமற்றது. இத்தகைய விஷயங்களில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. கர்நாடகாவில் நான் ஒன்றும் தனி நபராக கட்சிக்கு வெற்றி தேடி தரவில்லை. மக்கள் எங்களை நம்பினார்கள். நாங்கள் நல்ல நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறோம். ஒற்றுமையாக இருப்பதே வலிமை. சட்டசபையில் நான் ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியது சர்ச்சையாகி இருக்கிறது. ஏன் பாடினேன் என்ற கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். பா.ஜ.வுக்கு என்று கொள்கை இல்லாமல் இருப்பதே அதன் பலம். ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ. கொள்கையின் அடித்தளம். நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன்; காங்கிரஸ்காரனாகவே மரணிப்பேன். கர்நாடகத்தின் 'ஏக்நாத் ஷிண்டே' என்ற பேச்சுக்கே இடமில்லை. நேரு குடும்பத்தின் விசுவாசி; காங்கிரஸின் விசுவாசி. வேண்டுமென்றே இந்த சந்தேகத்தை தூண்டுகிறார்கள். அதற்கு பலன் கிடைக்க போவதில்லை. உண்மையில்லை நான் ஒரு ஹிந்து என்பதில் பெருமை கொள்கிறேன். உண்மையான ஹிந்து என்பதால், எல்லா மதங்களையும் மதிக்கிறேன். தர்மஸ்தலாவின் புகழை கெடுப்பதற்காக காங்கிரஸ் சதி செய்வதாக பா.ஜ. கூறுவது அபத்தமானது. அதில் உண்மை இல்லை. தர்மஸ்தலா விவகாரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. இடையிலான மோதலே காரணம் என்பது தான் உண்மை. இதை பகிரங்க குற்றச்சாட்டாக சொல்கிறேன். பா.ஜ. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பேசிய பேச்சுகள், ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை வெளியே வரும். 2023ல், 136 தொகுதிகளில் வெல்வோம் என்றேன்; அதன்படி நடந்து, ஆட்சி அமைத்திருக்கிறோம். 2028லும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். நாடு மாற்றத்துக்கு ஏங்குகிறது. 2029ல் ராகுல் பிரதமராக பொறுப்பேற்பார். இவ்வாறு சிவகுமார் பேசினார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ''ஆதார் அட்டையை 13வது அடையாள ஆவணமாக, சுப்ரீம் கோர்ட் சேர்த்துள்ளதை வரவேற்கிறேன். காங்கிரஸ் அரசு இந்திய மக்களுக்கு கொடுத்த பெரும் பரிசு ஆதார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ