ஆடு மாடுகள் இன்றி இயற்கை விவசாயம் ஏது: மாநாட்டில் சீமான் கேள்வி
மதுரை: 'ஆடு மாடுகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய முடியுமா' என மதுரையில் நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பில் நடந்த ஆடு மாடுகளின் மாநாட்டில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.அவர் பேசியதாவது:கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதலே ஆடு மாடுகள் நம் வாழ்வியலோடு ஒன்றி, உடன்பிறந்தவைகளாக இருக்கின்றன. காலுக்கு செருப்பாகவும், தோளுக்கு தோல் பையாகவும் மாடுகளின் தோல் பயன்படுகிறது. ஆனால் அவை உண்பதற்கு வைக்கோல் இல்லை. மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், வெண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை உண்கின்றனர். அவையோ போஸ்டர்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் உண்கின்றன.தமிழகத்தில் 12 லட்சம் ஹெக்டேர் மேய்ச்சல் நிலம் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அவற்றை ஆக்கிரமித்து அழித்துவிட்டனர். தமிழகத்தில் ரூ.ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி பாலுக்கான சந்தை மதிப்பு உள்ளது. ஆனால் வெறும் ரூ.50 ஆயிரம் கோடி சந்தை மதிப்புள்ள சாராயத்தை குடிக்க வைத்து தாய்மார்களின் தாலியை அறுக்கின்றனர். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் செல்வதால் கால்நடைகள் குடிக்க நீரின்றி தவிக்கின்றன. ஆடு மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம் என்பதை உணராத வரை நாட்டின் பொருளாதாரம் வளராது. அவை இன்றி இயற்கை விவசாயம் கிடையாது. பால் இருக்கும் வரை நாட்டில் பசி பட்டினி இருக்காது. ஆக., 3ல் தேனி மலையடிவாரத்தில் நானே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வேன். இவ்வாறு பேசினார். மாநாட்டில் முன் பகுதியில் ஆடுமாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்பின் தான் கட்சியினருக்கான சேர்கள் போடப்பட்டிருந்தன.