தேவேந்திர குல வேளாளர்களுக்கு ஆதரவாக சீமான் பொதுக்கூட்டம்
சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை, பட்டியலினத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில், ஆக., 2ல் பொதுக்கூட்டம் தேனியில் நடக்க உள்ளது. பட்டியல் இனத்தில் இருந்து, தங்கள் சமுதாயத்தை வெளியேற்ற வேண்டும். இட ஒதுக்கீட்டில் தனிப்பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவேந்திர குல வேளாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, நா.த.க., சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இது குறித்து, நா.த.க., வெளியிட்ட அறிக்கை: தேவேந்திர குல வேளாளர், தங்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி, நா.த.க., சார்பில், ஆக., 2ம் தேதி, தேனி, பங்களாமேடு பகுதியில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில், நா.த.க.,வினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.