சென்னை:'உண்மை சரிபார்ப்பு குழு என்று தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும்' என, தமிழகபா.ஜ., தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நகர்ப்புற பகுதிகளுக்கான பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் கீழ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது.இந்த திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு அதிகபட்ச வட்டி மானியம், 2.70 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த, 2016 - 17 மற்றும் 2022 - 23க்கு இடையே, கிராம பகுதிகளுக்கான பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மத்திய அரசு, தமிழக அரசுக்கு, 5,541 கோடி ரூபாய் வழங்கியது.இந்தாண்டுகளில், அந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி, 6,921 கோடி ரூபாய்.ஒட்டுமொத்த பயன்பாட்டில், கிராம பகுதிகளுக்கான திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுவதற்கான மொத்த செலவில், மத்திய அரசு, 80 சதவீதம் செலவிட்டு உள்ளது என்பதுதெளிவாகிறது.இன்னும் சிறிது ஆழமாக, உதாரணத்திற்கு கடந்த நிதியாண்டை எடுத்து கொள்வோம்.மத்திய அரசின் பங்கு, 2,004.39 கோடி ரூபாய். மொத்த பயன்பாடு, மாநில அரசின் பங்கு உட்பட, 2,290.47 கோடி ரூபாய்.தமிழக அரசின் பங்கு, 284.08 கோடி ரூபாய் என, தெரிகிறது. ஆனால், அதன் செலவு பட்டியலில் வேறு விதமாக உள்ளது.கடந்த, 2022 - 23 நிதியாண்டில், 555.89 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. இது, உண்மையாக செலவிட்ட நிதியை விட, 269.81 கோடி ரூபாய் அதிகம்.இதுகுறித்து, தணிக்கை அதிகாரிகள் கேட்கும்போது, தமிழக அரசு பதில் கூறட்டும்.சுருக்கமாக கூறினால், கிராம பகுதிகளுக்கான பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும், 70 சதவீதம் செலவழிப்பதாக, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு கூறுகிறது. இந்தக் கூற்று முழுக்க முழுக்க பொய்யானது. உண்மை சரிபார்ப்பு குழு என்று அழைத்து கொள்ளும் தமிழக அரசு நியமித்துள்ள குழு, தன்னை உண்மைக்கு அப்பாற்பட்ட குழு என்றே அழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.