ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் ஆன்மிக சுற்றுலாவுக்கு சிறப்பு ரயில்; பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு தகவல்
திண்டுக்கல்; தென்னக ரயில்வே சார்பில் ஜோதிர்லிங்கம், சீரடி பெயரில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட உள்ளன என ஐ.ஆர்.சி.டி.சி.,யின் தென் மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு கூறினார். திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி: இந்திய ரயில்வே சுற்றுலாவுக்காக பாரத் கவுரவ் பெயரில் சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கி வருகிறது. 2 டயர் ஏ.சி.,ஒரு பெட்டி, 3 டயர் ஏ.சி., 6 பெட்டிகள், 3 ஸ்லீப்பர் பெட்டிகள், பேண்டரி, 2 பவர் கார்கள் என மொத்தம் 13 பெட்டிகளை கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது. தென் மண்டலம் சார்பில் திருநெல்வேலியில் இருந்து நவ.,9 ல் துவங்கி 16 வரை நாசிக், சீரடி, சனி சிங்கனாப்பூர், பண்டரிபுரம், மந்திராலயம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலாவாக பாரத் கவுரவ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எக்னாமி(ஸ்லீப்பர்) கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.14 ஆயிரத்து 400, ஸ்டாண்டர்டு(3 டயர் ஏ.சி.,) ரூ.26 ஆயிரம், கம்பர்ட்(2 டயர் ஏ.சி.,) ரூ.36 ஆயிரத்து 500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில், பயணிகளுக்கு ஏ.சி., நான் ஏ.சி., தங்குமிடங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், மருத்துவ வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, டூர் கைடு உள்ளிட்டவற்றை ஐ.ஆர்.சி.டி.சி., வழங்குகிறது. இந்த ரயில் நவ.,9ல் திருநெல்வேலியில் புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக சென்று மீண்டும் அதே வழியாக நவ.,16ல் திருநெல்வேலி வந்து சேரும். இன்ஸ்சூரன்ஸ் வசதி உண்டு. ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புவோர் மதுரை அலுவலகத்தில் 82879 31962, 82879 32122, திருச்சியில் 82879 32070, கோயம் புத்துாரில் 90031 40655, சென்னையில் 90031 40739, 82879 31964 என்ற எண்ணிலும், www.irctctourism.comஎனும் இணைய முகவரியிலும் முன்பதிவு செய்யலாம் என்றார்.